இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதற்கு பதிலளித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி
போர் நிறுத்தம் என்பது அமுலுக்கு வரவில்லை. இஸ்ரேல் தான் போரை தொடங்கியது. அவர்கள் தான் போரை நிறுத்த வேண்டும் .
மேலும் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், ஈரான் தாக்குதல் நடத்தாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
மேலும் போர் நிறுத்தம் குறித்து ஈரான் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் தவறு செய்த இஸ்ரேல் இப்போது தண்டிக்கப்படுகிறது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கோமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு கொமேனி கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
"இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப்பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தனது பதிவுடன் வான்வழித்தாக்குதல் போல தோற்றமளிக்கும் ஒரு படத்தையும் கொமேனி பகிர்ந்துள்ளார்.
அந்த படத்தின் நடுவே ஒரு மண்டை ஓடு உள்ளது. அதன் நெற்றியில் யூத அடையாளத்தை குறிக்கும் அல்லது யூத மதத்தை குறிக்கும் இஸ்ரேல் கொடியில் உள்ள சின்னம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.